திங்கள், 30 ஏப்ரல், 2018

TNPTF GEN SEC... அறிவிப்பு

*"தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டங்களும்" மாநிலப் பொதுச்செயலாளரின் விரிவான கட்டுரை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟



*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்புப் போராட்டங்களும்_*


*🌟தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!*


*🌟தமிழகம் முழுவதும் போராட்ட மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன, எத்திசை நோக்கினும் போர்க்குரல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன,  ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவருமே போராட்டக்களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் வழக்கம்போல் அசைவற்ற நிலையிலேயே உள்ளது.*



*_"போராட்டங்கள் யாராலே… புத்தி கெட்ட அரசாலே" என்ற முழக்கம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது._*



*🌟தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கின்ற விவகாரத்தை ஒரு நிர்மலாதேவியே பின்னுக்குத் தள்ளிவிட்டார். இதுதான் வழக்கமான தமிழகத்தின் நிலை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் எளிதில் மறந்துவிடக்கூடியவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள்.  தமிழக மக்களில் ஒரு பகுதியினராக உள்ள தமிழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினரும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதைத்தான் சமீபத்திய இடைநிலை ஆசிரியர் போராட்ட நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக கணக்கற்ற களப் போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பார்த்துக்கூட "என்ன செய்தது இந்த இயக்கம்?" என்று சிலர் கேள்வி கேட்கிற நிலையும், அன்றைக்குப் போராட்டம் நடத்துகிற இயக்கம் எதுவோ அதன் பின்னால் செல்வது என்பதும்கூட கோரிக்கையின் மீதான ஆழமான நியாயத்தை வெளிப்படுத்தினாலும் கூட, அக்கோரிக்கைக்காக எண்ணற்ற களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற இயக்கங்களை விமர்சிப்பது என்பது வேடிக்கையான ஒன்றாகவே உள்ளது.*



*🌟பொதுவாக, அநீதிக்கு எதிரான நியாயமான போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்த்தப்பட வேண்டியவை ஆதரிக்கப்பட வேண்டியவை என்பதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு இருவேறு கருத்துக்கள் கிடையாது. நியாயமான கோரிக்கைக்காக களத்தில் நிற்பது நேரெதிர்; கொள்கை கொண்ட அமைப்பாக இருந்தாலும் அக்கோரிக்கை வெற்றி பெற நெஞ்சார வாழ்த்துவதுதான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயல்பு. அவ்வகையில் நடந்து முடிந்த போராட்டத்தை நமது பேரியக்கம் வாழ்த்துகிறது. இருந்தாலும், இந்நேரத்தில் நம் இயக்கத்தின் நிலைப்பாட்டில் நமது உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், அவர்கள் முன் வைத்த சில விமர்சனங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக சில கள எதார்த்தங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.*



*🌟2016 ஆம் ஆண்டில் இதேபோன்று "உயிர் துறக்கும் போராட்டம்" என்ற பெயரில் போராட்டம் நடத்திய இதே நண்பர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து அப்போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அனைத்துக் களப்போராட்டங்களும் வெற்றியில்தான் முடியும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது.*



*🌟அவ்வகையில் அது ஒன்றும் தவறில்லை ஆனால், அதன்பின்பு இப்பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமே தீர்வுகாண முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்து தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களிடம் வழக்குநிதி வசூலித்து ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே தனியே வழக்குப் போட்டதும்,  அவ்வழக்கில் ஒரு சில தினங்களில் தீர்ப்பு வந்துவிடும் என்று ஆசிரியர்களை நம்ப வைத்ததும், வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ள நிலையிலும், தாங்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்ததும், கூட்டுப்போராட்டத்தின் வலிமைக்கு பயன் தருமா? என்பதைத் தொடர்புடைய நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟இந்த இரட்டை நிலைப்பாட்டை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? போராட்டக்களத்தில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை நிகழ்வுகளில் "நீங்கள் தொடுத்த வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி அரசு செயல்படும்" என்று அரசுத் தரப்பு சொல்வதற்கு நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக ஆகிவிடாதா? என்பதையும் தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்.*



*🌟ஜேக்டோ ஜியோவின் வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களால் நீதிமன்ற தலையீட்டால் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபோது இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஊதியக்குழுவின் ஊதிய நிர்ணயம் செய்வதை மறுத்து கடிதம் அளிக்குமாறு தவறாக வழிகாட்டியதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இடைநிலை ஆசிரியர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.*



*🌟"சமவேலைக்குச் சம ஊதியம்" பெறுகின்ற அரசாணையைப் பெறுகின்ற வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று அறிவித்தவர்கள் நான்கு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு இம்மியளவும் இறங்கிவராத நிலையில் கல்வியமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எப்படி போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.*



*🌟06.09.2017அன்று ஈரோட்டில் முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து போராட்டக்களத்திலிருந்து வெளியேறிவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அத்தலைமையின் பின்னால் அணிவகுத்துச் சென்ற ஆசிரிய சகோதர, சகோதரிகள் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதும், அவர்கள் எந்த மனநிலையோடு போராட்டக்களத்திலிருந்து வெளியேறினார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.*



*🌟பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் கூட்டமைப்பான ஜேக்டோ ஜியோவில் இருந்து கொண்டே, அதன் போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியக் கோரிக்கையாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உறுதியான நிலைப்பாட்டிற்கு மாறானநிலை எடுத்து கூட்டமைப்பின் வலிமைக்கு குந்தகம் ஏற்படுத்துவதும், மே-8 முற்றுகைப் போரட்ட நிகழ்வை திசை திருப்பும் நோக்கில் செயல்படுவதும் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எதிர்கால நலன்களுக்கு உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய தருணமிது.*



*🌟மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது சாதாரணமாகக் கிடைத்ததல்ல.  44 ஆண்டுகாலமாக பல்வேறு களப்போராட்டங்களின் பின்னணியில் அடிபட்டு, மிதிபட்டு, பல இன்னுயிர்களை இழந்து பெற்றதாகும். அவ்வாறு பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்கள் 1.6.1988 முதல் 31.12.2005 வரை மட்டுமே பெற முடிந்தது.  எனவே, இழந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைத் பெறுவது என்பதே சரியானதாக இருக்கும். ஆனால், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை விட்டுவிட்டு "சம வேலைக்குச் சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன் வைப்பது இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகாது என்பதையும், இதுபோன்ற நிலை எதிர்கால ஊதியக்குழுக்களில் மீண்டும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் நுணுகி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.*



*🌟மேலும், தொழிற்சங்க இலக்கணம் என்பது கூட்டுப்பேர சக்தியை அதிகரித்து அதன்மூலம் அதிகார வர்க்கத்திடமிருந்து நம் உரிமைகளை மீட்டெடுப்பது என்பதுதான்.  ஆனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கொண்ட ஜேக்டோ ஜியோவிலிருந்து விலகி நின்று ஜேக்டோ ஜியோவின் போராட்டம் உச்சநிலையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் மிக முக்கியத் கோரிக்கையாக உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதியத்திற்காக தனியே ஒரு போராட்டத்தை அறிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி " ஒரு நபர் குழுவின் அறிக்கையின்படியே ஊதியம் வழங்கப்படும்" என்ற அரசின் அறிவிப்பை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்றது என்பது கூட ஜேக்டோ ஜியோவின் மே-8 முற்றுகைப் போராட்ட நிகழ்வில் இடைநிலை ஆசிரியர் ஊதியக் கோரிக்கைக்கு முன்கூட்டியே முடிவெழுதுகின்ற செயலாகவே கருதப்படும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.*



*🌟மேலும், போராட்டத்திற்குத் தலைமையேற்றவர்கள் தோழமை உணர்வோடு சகோதரச் சங்கங்களைக் கூட அழைக்காமல் போராட்டக்களத்தை தனிமனித பாராக்கிரமச் செயலாக நினைத்துக்கொண்டு செயல்படுவது என்பது விளம்பரத்திற்கும், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கும் வேண்டுமானால் பயன்படலாமேயொழிய கோரிக்கையை வென்றெடுக்க உதவுமா? என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அக்கோரிக்கை வெற்றிபெறாத நிலையில், அதே கோரிக்கையைப் பிரதானமாகக் கொண்டு நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோவின் உச்சகட்டப் போராட்டமான மே-8 முற்றுகைப் போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததும், 5,6 மாதங்களில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவிப்பதும் அரசுக்கு அவகாசம் கொடுக்கின்ற செயலாகவே அமையும் என்பதையும் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.*



*🌟இச்சூழலில் போர்க்குணமும், பொதுநலச்சிந்தனையும் கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடந்தகாலச் செயல்பாடுகளை, தன்னிகரற்ற போராட்ட நிகழ்வுகளை இன்றைய இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது காலத்தின் தேவையாக உள்ளது.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி 02.08.1984ல் உருவான இயக்கம். உருவான மறுநாளே சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும், அதற்கு மறுநாள் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணியையும் நடத்திய இயக்கம். எனவேதான் "உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம்" என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு பெயர் உண்டு.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொழிற்சங்க இலக்கணம் பொருந்திய இயக்கம்.  தனிமனித துதி இல்லாத இயக்கம்.  எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் போராடுகிற நெஞ்சுறுதியும், நேர்மைத்திறனும் கொண்ட இயக்கம்.  தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றிலே இதுவரை எந்த இயக்கமும் நடத்தியிராத களப்போராட்டங்களை நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற பேரியக்கம்.*



*🌟அதிகாரிகளிடமோ, ஆட்சியாளர்களிடமோ போராட்டக்களத்தில் அணுவளவும் சமரசம் செய்துகொள்ளாத பேரியக்கம். ஆசிரியர் நலனும், கல்வி நலனும் சமூக நலனுடன் இரண்டறக் கலந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம், வர்க்க சிந்தனையும், தர்க்க சிந்தனையும் கொண்ட சொர்க்க சிந்தனையற்ற தலைமையையும், உறுப்பினர்களையும் கொண்ட பேரியக்கம்.*



*🌟1985 நவம்பர் 3 ஜேக்டீ ஆணை எரிப்புப் போராட்டத்தில் முதலில் பங்கேற்று இறுதிவரை உறுதியுடன் களத்தில் நின்று போராடிய அமைப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.* 



*🌟1988 வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல அமைப்புகள் இடையில் சேர்ந்து இடையில் காணமல் போன நிலையிலும், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருத்தி தெரிவித்து போராட்டத்தில் இருந்து விலகியதோடு அரசியல் ஆதாயத்திற்காக தொடர்ந்து போராடுகிறார்கள் என்று நம்மை விமர்ச்சித்த நிலையிலும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கிய 22.06.1988 முதல் இறுதி நாளான 22.07.1988 வரை களத்தில் நின்று சென்னை முற்றுகையின் முடிவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற ஆணை பெறும் வரை களத்தில் முன்னணிப் படையாய் நின்ற பேரியக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோன்றியபிறகுதான் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு பல்வேறு உரிமைகளும், சலுகைகளும் கிடைத்தன.*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்*


*⚡மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி*


*⚡தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்*


*⚡பாதிக்கப்பட்ட பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்*


*⚡வேலைவாய்ப்பக பதிவுமூப்பின்படி ஆசிரியர் நியமனம்*


*⚡ஒளிவு மறைவற்ற பொதுமாறுதல் கலந்தாய்வு*


*⚡தொடக்கக்கல்விக்கென தனி இயக்குநரகம்*


*போன்றவை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகளாய் முன்னெடுக்கப்பட்டு கணக்கற்ற களப்போராட்டங்களின் இறுதியில் உறுதியுடன் பெறப்பட்டவை என்பதுதான் வரலாறு.*



*🌟நீதிக்கான போராட்டங்களுக்கு வீதிக்கு வந்தே விடைகாண முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இயக்கம். களப்போராட்டங்களில் தனிச்சங்க நடவடிக்கைகளில் தன்னிகரற்ற தனிப்பெரும் இயக்கம். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கிற கூட்டுப்போராட்டங்களை வடிவமைத்ததில் பெரும்பங்கு வகித்த பேரியக்கம்.*



*🌟44 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்து அன்றுமுதல் இன்றுவரை தொய்வின்றித் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற இயக்கம்.*



*🌟25.03.2018-ல் "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு" என்ற ஒற்றைக் கோரிக்கை மாநாடு நடத்திட மாநிலச் செயற்குழு முடிவெடுத்து முன்னெடுத்த நிலையில் ஜேக்டோ ஜியோவின் வேண்டுகோளை ஏற்றும், கூட்டுப் போராட்டத்தின் ஒற்றுமை கருதியும், அதன் வலிமை கருதியும் அம்முடிவைத் தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிற இயக்கம்.*



*🌟தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஜேக்டோ ஜியோ நிச்சயம் வென்றெடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு உண்டு.*



*🌟அதை நோக்கிய களப்பயணம்தான் மே-8 முற்றுகைப் போராட்டம், அப்போராட்டத்தில் தமிழ்நாட்டின்  அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றுச் சரித்திரம் படைக்கப் போகிறார்கள்.*



*🌟கடந்த காலங்களில் கூட்டுப் போராட்டங்களே நம் கோரிக்கைகளின் வெற்றியைத் தீர்மானித்தன என்பது வரலாறு.  தமிழ்நாட்டின் ஆசிரியர் - அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் எந்த ஒரு கூட்டுப் போராட்டமும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.  அதை நோக்கிய பயணம் தான் மே-8.*



*🌟இன்று தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் மிக முக்கியக் கோரிக்கைகளாக உள்ள*


*⚡மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,*


*⚡தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் ரத்து*


*ஆகிய கோரிக்கைகளுக்காக வேறு எந்த இயக்கமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு களப்போராட்டங்களை நடத்திய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



*🌟தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை காழப்புணர்ச்சியின் காரணமாகவோ அல்லது திட்டமிட்டோ அல்லது உள்நோக்கத்தோடோ அல்லது கடந்தகால போராட்ட நிகழ்வுகளை அறியாமலோ அல்லது ஞாபக மறதியிலோ விமர்சிக்கும் ஒரு சில நண்பர்களுக்கு*


*⚡01.06.2009-க்குப் பிறகு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாகவோ அல்லது கூட்டு நடவடிக்கையாகவோ நடத்திய களப்போராட்டங்களை கீழக்கண்டவாறு பட்டியலிடுகிறோம்.*


*_தெரிந்து கொள்க! தெளிந்து கொள்க!தேவையேற்படின் இதே பிரச்சனைக்காக பிற இயக்கங்கள் நடத்திய போராட்டங்களை ஒப்பிட்டு உணர்ந்து கொள்க!_*



*🌟இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனிச்சங்கப் போராட்டங்கள்:*


*⚡02.07.2009 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡07.07.2009 - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளருடன் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡30.08.2009 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம்*


*⚡29.09.2009 - ஒரு நபர் குழுவுடன் மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡18.02.2010 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡03.03.2010 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡02.08.2010 - உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பெருந்திரள் முறையீடு*


*⚡07.01.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡29.01.2011 - மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்துடன் தர்ணா*


*⚡10.02.2011 - தற்செயல் விடுப்புப் போராட்டம்*


*⚡27.07.2011 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡18.08.2011 - சட்டமன்றக் கட்சித்தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு*


*⚡28.01.2012 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡10.04.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡11.07.2012 - மூவர் குழுவிடம் விண்ணப்பம் அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡07.11.2012 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡15.03.2013 - மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡10.04.2013 - இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு - சென்னை*


*⚡13.07.2013 - மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா*


*⚡30.08.2013 - மாவட்டத் தலைநகரங்களில் மறியல்*


*⚡12.06.2014 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡04.11.2016 - வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்*


*⚡20.11.2016 - மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡03.02.2017 - தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போர் - சென்னை*


*⚡31.03.2017 - 8வது ஊதிய மாற்றக் குழுவிடம் கோரிக்கை மனு அளித்துப் பேச்சுவார்த்தை*


*⚡இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனைக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கு கொண்ட கூட்டுப் போராட்டங்கள் 12.10.2009முதல் 15.10.2009 முடிய-டிட்டோ ஜேக் சார்பில் அஞ்சல் அட்டை இயக்கம்*


*⚡19.09.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡24.10.2010 - டிட்டோ ஜேக் சார்பில் கோட்டை நோக்கிப் பேரணி சென்னை*


*⚡20.11.2010 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதம்*


*⚡27.12.2010 முதல் 30.12.2010 முடிய- டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் மறியல்*


*⚡02.02.2014 - டிட்டோ ஜேக் சார்பில் மாவட்டத்தலைநகரங்களில் பேரணி*


*⚡06.03.2014 - டிட்டோ ஜேக் சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தம்*


*⚡08.03.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர் பேரணி*


*⚡19.04.2015 - ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகர்  உண்ணாவிரதம்*


*⚡01.08.2015 - ஜேக்டோ சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் சென்னை*


*⚡08.10.2015 - ஜேக்டோ சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம்*


*⚡30.01.2016 முதல் 01.02.2016 முடிய- ஜேக்டோ சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல்*


*⚡15.02.2016 முதல் 17.02.2016 முடிய-அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்*


*⚡18.02.2016 முதல் 19.02.2016 முடிய- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்*


*⚡18.07.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡05.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் பெருந்திரள் முறையீடு*


*⚡22.08.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம்*


*⚡07.09.2017 முதல் 15.09.2017 முடிய-ஜேக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம்*


*⚡24.11.2017 - ஜேக்டோ ஜியோ சார்பில் வட்டத்தலைநகர் ஆர்ப்பாட்டம்*


*⚡21.02.2018 முதல் 24.02.2018 முடிய-ஜேக்டோ ஜியோ சார்பில் சென்னையில் தொடர்மறியல்*



*🌟ஜேக்டோ ஜியோவின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நம் பேரியக்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் களத்தில் செயலாற்றி வருகிறது.*



*🌟இடைநிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியத்தைப் பெறும் முனைப்போடு செயலாற்றி வருகிறது.*



*வில்லிலே இருந்து புறப்பட்ட கனையைப் போல இலக்கை நோக்கி மிகச்சரியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இலக்கை அடையும்வரை அதன் பயணம் நில்லாது. விமர்சன வெளிச்சத்தில் பயணிப்போம். வெல்லும் வரை பயணிப்போம்.இறுதி வெற்றி நமதே!*



*_"களப்போராட்டங்களில் பத்துமுறை தோற்றுவிட்டோம் என்று துவண்டுவிடாதே! பத்துமுறை தோற்றாலும் பதினோறாவது முறையும் போராட எழுந்து நிற்கிறோம் என்று எழுச்சிகொள்!"_*

*- மாமேதை லெனின்.*


  

⚡தோமையுடன்
                                           

*தோழர்.ச.மயில்,*    

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பரதக்கலை என்பது தமிழரின் கலை

DONT MISS IT 
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் – 
நன்றி -https://www.linesmedia.in
பத்திரிகையாளர் பா.ஏகலைவன்.


பத்திரிகையாளர் பா.ஏகலைவன்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவர்களின் வரலாறை மாற்றி எழுத வேண்டும்.. கல்வி கற்க விடாமல் தடுக்க வேண்டும்.

கொலைகளில் இது ஒரு வகை.. சிரிச்சுக்கிட்டே கத்தியை வயிற்றில் சொருகுவதுபோன்றது.

இப்போ நீங்க பார்க்கப்போறதும் அப்படி ஒரு பஞ்சாயத்துதான்.

பத்ம விபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட உயர்ந்த பல விருதுகளை பெற்று, நாடு போற்றும் பரதக் கலை நிபுனரான முனைவர் பத்மா சுப்ரமணியன் அவர்கள் இன்று பரதநாட்டியக் கலையின் பிதாமகராக கூறப்படும் பரதமுனிவருக்கு ஒரு நினைவு மண்டபமும், கண்காட்சி அரங்கத்தையும் அமைத்துள்ளார்.

இதன் மூலம் பரதநாட்டியக் கலை பரத முனிவர் மூலமாக உலகுக்கு கிடைத்தது. அவர்தான் அதற்கான 'நாட்டிய சாஸ்திர' நூலை இயற்றினார். அதற்கு முன்பு அப்படி ஒரு ஆடல் கலையே இல்லை என்ற பிம்பத்தை, உருவாக்கி வைத்துள்ளார்கள். 

பொதுவாகவே இந்த பரதநாட்டியக் கலை ஆரியர்களுக்கு உரியது. மேல்தட்டு வர்க்கமான பார்ப்பனர்களிடம் இருப்பது. உயர்ந்த , கலையாக போற்றப்படுவது என்ற கட்டமைப்பையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரலாறுகளை காலம்தோறும் திரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில்தான் இப்போது பரத முனிவருக்கான நினைவு மண்டபமும், கண்காட்சி அரங்கமும் அமைத்துள்ளார் முனைவர் பத்மா சுப்ரமணியம். "நான் பரதம் கற்றுக்கொண்டது தேவதாசி வழிவந்தவரான மயிலை கௌரியம்மாளிடம் தான்" என்று கூறிக்கொண்டாலும் 'வரலாற்று பதிவுகளை' என்னவோ பரத முனிவர் அடியொற்றிதான் இவர் பதிக்கின்றார் .

பதரநாட்டியக் கலைக்கு பரதமாமுனிவர்தான் நாட்டிய இலக்கணம் வகுத்தார். நாட்டிய சாஸ்த்திரம் என போற்றப்படும் அந்த நூல் மூலம் தான் பரதக்கலை இன்றும் அழியாமல் போற்றப்படுகிறது. இந்த கலைக்கு ஆதியும் அந்தமும் பரதமுனிவர் தான் என்பதாக கூறுகின்றார். இது இவர் மட்டுமல்ல, இவர்களின் வழித்தோன்றல்களும் அப்படித்தான். 

தமிழர்களிடம் இருந்த வான சாஸ்திரம் உள்ளிட்ட பல கலைகளை எடுத்து திரித்து தனதாக்கிக் கொண்ட பல வரலாற்று திரிபுகளில் நாட்டியக்கலையும் ஒன்று.

பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்திரம் நூல் வகுத்தார் என்பது உண்மைதான். மிக முக்கிய நாட்டிய நூலாக போற்றப்படும் அந்த நூல் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டது. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கெல்லாம் மூலம் எங்கே? எங்கிருந்து அவற்றைக் கற்றார். எங்கிருந்து எடுத்தெழுதினார்? அதற்கு முன்பு ஆரியர்களிடம் அந்த கலை இருந்ததா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலைத் தேடினால், இல்லை என்பதே பதில். 

ஆனால் தமிழர்களிடம் இருந்தது. எப்போதிருந்து? இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கும் முன்பிருந்து! கி.மு. 5-ம் நூற்றாண்டில் தொடங்கி  கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான சங்க காலம் என்கிறோமே அப்போதிலிருந்தே. அதன் பெயர் சதிராட்டம். ஆடல் பாடல் கூத்து என்ற பெயர்களில் இந்த தமிழ்ச் சமூகம் ஆடிப்பாடி மகிழ்ந்திருக்கின்றது. (ஆனால் தொல்காப்பியரின் காலம் கி.மு.711 என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் கி.மு. 7.ம் நூற்றாண்டு என்பதே சரி எனலாம்)

அந்த காலகட்டங்களில் எழுதிய பல நூல்கள் மறைந்து போயிருந்தாலும் தொல்காப்பியம்,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென் கீழ்கணக்கு ஆகிய நூல்கள் அரிய வகை முக்கிய நூலாக கிடைத்திருக்கின்றன.

இதில் தொல்காப்பியத்தில் சதிராட்டம் (நாட்டியம்) பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பத்துப்பாட்டில் நடனக் கலைஞர்களை விறலியர், கூத்தர் என்றே அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதே காலகட்டத்தில், அதாவது தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திலேயே கூத்தனூரைச் சேர்ந்த சாத்தனார் என்பவரும் வாழ்ந்திருக்கிறார். நாடெங்கம் சுற்றியலைந்து மக்களிடம் உள்ள நாட்டியக் கலைகளைப் பற்றிய ஆய்வுகளையும் குறிப்புகளையும் தொகுத்து "கூத்த நூல்' ஒன்றை இயற்றியுள்ளார். நாட்டியக்கலை பற்றி மிகச் சிறந்த, பழமையான நாட்டிய இலக்கண  நூலாக இது பார்க்கப்படுகிறது.இவர் 'நாட்டிய பிரம்மா' என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றார். இதில்கூட பரதநாட்டியம் என்ற பெயர் குறிப்பேதுமில்லை. சதிராட்டம், ஆடல் பாடல், நாட்டியம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய 'அடியார்க்கு நல்லார்' உரை மூலம் ஆடல் கலை தொடர்பான,  அகத்தியம், சிகண்டி முனிவர் இயற்றிய, 'இசை நுணுக்கம்', யாமளேந்திரர் எழுதிய இந்திர காளியம், ஆதிவியலார் எழுதிய பரதசேனாதிபதியம் பாண்டி மன்னர் மதிவாணர் செய்த மதிவாணம் என நூல்களை அறிய வருகிறோம்.  

இவற்றிலெல்லாம் முன்னோடியாக இருப்பது கூத்தனூரை சேர்ந்த சாத்தனார் எழுதிய 'கூத்த நூல்' என்பதுவே.

இந்த 'கூத்த நூல்' ஒன்பது பகுதிகளை கொண்டிருக்கிறது.

1) நடனக் கலையின் தெய்வீக உணர்ச்சிகளை விவரிக்கும் "சுவை நூல்". நாட்டியம், இசை, நாடகம் ஆகிய கலைகளின் தெய்வீகத் தோற்றம், பல்வேறு ஒலிகளின் தோற்றம், அரங்கில் உணர்ச்சிகளை வெளியிடும் முறைகள், இவற்றிக்கான கோட்பாடுகள் என இதனுள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

2) இரண்டாவது சிவபெருமான் ஆடிய 108 தாண்டவ நாட்டிய முறையை விவரிப்பது. 12 சிவதாண்டவ நாட்டிய முறைகளின் 39 வடிவங்கள், அதிலிருந்து பிறந்த 12 வித நாட்டிய முறைகள் என்று மொத்தம் 144 நாட்டிய முறைகள் பற்றி விவரிக்கும் 'தொகை நூல்'.


3) அடுத்து இயற்கை வடிவங்கலான  நீர், நிலம் , நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பாகுபாடுகளை ஓட்டி அமைக்கப்பட்ட நாட்டிய வடிவங்களான கிராமிய நடனங்கள் பற்றிய 'வரி நூல்'.

4) நான்காவது, 120 கரணங்கள், அவற்றிக்கு தகுந்த முத்திரைகள் என நாட்டிய குறிப்புகளின் தொகுப்பான 'கரண நூல்'.


5) நாட்டியத்தின் போது, கண்கள், கால்கள், கை, விரல்கள், தொடை, பாதம் என அங்க அசைவுகள் எப்படியெல்லாம் முத்திரை பதித்து இருக்க வேண்டும் என்று விவரிக்கும் 'கலை நூல்'!.

6) ஐந்து அடிப்படைத் தாளங்கள், அதிலிருந்து  கிடைத்த 35 தாளங்கள், ஆட்ட தாளம் எனும் அகஸ்த்திய முனிவரின் 108 தாளங்கள் என விவரிக்கும் 'தாள நூல்'.


7) மறைந்த முப்பது பண்களின் ஆரோகண, அவரோகண வரிசைகளையும் விவரிக்கும் 'இசை நூல்'. தேவாரத்தை எழுதிய நாயன்மார்கள் இப்பண்களை கையாண்டிருக்கிறார்கள்.

8) அரங்க அமைப்பு முறை, அதற்கான ஒலி, திரை, நாடக உணர்ச்சிகளுக்கான ஒளி வடிவங்கள், ஒப்பனை, ஆகியவற்றை விவரிக்கும் 'அவை நூல்'.


9) நாட்டியத்தின் குறிக்கோள், உடல் வலிமையும், குரல் வளமும் குன்றாமல் இருக்க தேவையான மருந்துகள், களிம்புகள், உடற்பயிற்சி, யோக சாதனை, மனதை ஒரு நிலையில் வைக்கும் முறை, நாட்டியத்தில் மூர்ச்சை அடக்கும் முறை என்பதை பற்றியெல்லாம் விவரிக்கும் "கண் நூல்'.

என்று நாட்டியத்தின் எல்லா கூறுகளையும் விளக்கும் 'கூத்த நூலில்'கூட பரத நாட்டியம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. கூத்தக்கலை,சதிராட்டம் என்ற பெயர்களிலேயெ குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதற்கடுத்து வந்த சிலப்பதிகாரத்திலும் ஆடல் பாடல் நாட்டியக் கலைக்கென்று தனியே 'அரங்கேற்று காதை' படலமே சான்றாக உள்ளது. நாட்டியக் கலையின் எல்லா கூறுகளையும் இந்த அரங்கேற்ற காதையில் காணலாம்.  அரங்கேற்றுக் காதையில் நடனம், அரங்கு உள்ளிட்ட ஒவ்வொன்றை பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

இந்த காலகட்டத்தை ஒட்டிதான் பரதமுனிவர் வருகிறார். மேற்சொன்ன தமிழறிந்த கலைஞர்களின் நூல்களில் இருந்து, இங்கிருந்த ஆடல் பாடல் கலைகளில் இருந்து அனைத்தையும் எடுத்து வடமொழியில் தொகுத்து 'நாட்டிய சாஸ்த்திர' நூலாக ஆரியர்களுக்கு விட்டுச் சென்றார். அதாவது வடநாட்டவருக்கு.

அவர்களின் வழித் தோன்றல்களும் அதைத்தான் முதன்மைபடுத்தி வருகிறார்கள். நாட்டியம் என்றாலே சதிராட்டம்,தொல்காப்பியம், கூத்தநூல், சிலப்பதிகாரம், சிவதாண்டவத்தை மறைத்துவிட்டு, பரதமுனிவர் இயற்றிய 'நாட்டிய சாஸ்த்திர'த்தையும், நடராஜரையும் தூக்கிப் பிடிப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நடராஜர் நாட்டியமாடும் விஷயம் இருக்கிறதே, அது எப்போது, எங்கே, எப்படி என்பதுதான். சிவபெருமானின் (108) தாண்டவத்திற்கு கூத்தனார் எழுதிய 'கூத்த நூல்' ஆதாரமாக இருக்கின்றது. ஆனால் சிதம்பர நடராஜருக்கு? 

சங்ககாலத்திற்கு அடுத்து, இடைக்காலம் தொடங்கிய கி.பி. 4-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் வந்த இலக்கியங்களான மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்கூட ஆடல் பாடல் கலையான நாட்டியத்தைப் பற்றி கூறுகிறது. அதிலும்கூட நடராஜர் தாண்டவம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.  

அதற்கடுத்து கி.பி.ஏழாம் நூற்றாண்டு காலத்தில்தான் பக்தி இசை தழைத்தோங்கியதாக ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றது. இந்த காலகட்டத்தில் தான் 'நடராஜர்' நாட்டியமாடிய  வித்தை புனையப்பட்டது, புகுத்தப்பட்டது. சுறுங்கச் சொன்னால் (சிதம்பர) நடராஜர் நாட்டியம் என்பது ஒரு புகுத்தப்பட்ட கற்பனையே. தேவார ஆய்வாளர்களின் கூற்றும் அதுவாகதான் உள்ளது.  

அடுத்து தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் தான் இசை நாட்டிய வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது.(கி.பி.985-1014) அதற்கடுத்து 12 நூற்றாண்டில் ஜெயதேவர் என்பர் வடமொழியில் 'ஜெயகோவிந்தம்' இயற்றினார். இது அஷ்டபதிகள் என்று அழைக்கப்பட்டு நாட்டிய வடிவமாக விளங்குகிறது. அதற்கடுத்து 15-ம் நூற்றாண்டில் தோன்றிய அருணிகிரிநாதர் நாட்டிய வடிவத்திற்கான இசை வடிவங்களை படைத்தளித்தார்.

'பிற்காலம்' என்றழைக்கப்படும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துத்தாண்டவர் பதம் எனும் இசை வடிவங்களை உருவாக்கினார் என்று நகர்கின்ற இசை-நாட்டிய வரலாற்று நூல்களின் தொடக்க காலம், 'பரதநாட்டியத்திற்கு வித்திட்டவர் பரத முனிவர் என்றோ, அதற்கான தொடக்க நூல் வடிவம் 'நாட்டிய சாஸ்த்திரம் என்றோ எங்கேயும் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழர்களின் அரசியல் தளத்தில் மட்டுமல்ல, அவர்களின் கலை பண்பாட்டுத் தளத்திலும் திரிப்புவாதமும்- புரட்டுகளும் நடந்தேறிக்கொண்டுதானிருக்கின்றது.அது, இன்றுவரை தொடர்கிறது/

கொசுறு தகவல்:
பரத முனிவரின் மணி மண்டபத்திற்கான ஐந்து ஏக்கர் இடம் ஜெ.ஆட்சியில் கொடுக்கப்பட்டது. அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில் அடிக்கல் நாட்டும் விழா எடுக்கப்பட்டது. அதற்கு கலைஞரிடம் ஒரு வாழ்த்துக் கடிதம் கேட்க அவர் மறுத்தார். பரதக்கலையை இளங்கோவடிகளில் இருந்து தான் ஆய்வுக்கு எடுத்தாள வேண்டும். தொடக்கம் அதுதான் என்றார். அதை பத்மா சுப்ரமணியன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இது பற்றிய செய்தி அப்போது தினகரனிலும் வந்தது. விவாதமும் நடந்தது.

அதனால் மனஸ்தாபம் முற்றியது. அரசு கொடுத்த இடத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் யோசித்தார் கலைஞர்.

ஆனால் ஆரிய ஆட்டம் வேறு மாதிரியானதாயிற்றே. அதிகார பீடமான சங்கரமடத்திற்கு தகவலை சொல்ல, அங்கிருந்து டெல்லி 'மையத்திற்கு' தகவல் போக, அங்கிருந்து விதம் விதமான அழுத்தம். வருமான வரித்துறை அது இது என்று எத்தனை இருக்கிறது?!!

கடைசியில் என்ன நடந்தது என்றால் மீண்டும் நடந்த ஒரு விழாவில் கலைஞர் நேரில் சென்று கலந்து கொண்டு வாழ்த்தி பேச வேண்டியதாயிற்று. அப்போதும், பரதர்களிடம் இருந்த கலை இது- அது என்று 'அடையாள' எதிர்ப்பை மைல்டாக தெரிவித்துவிட்டு வந்தார். (இப்படி, பலவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டே வீரம் பேசினார் என்பது வேறு கதை)

தவிர இதுகுறித்து பல்வேறு விவாதங்கள், எதிர்ப்புகள் ஏற்கனவே நடந்திருப்பதை இணையத்தில் ஏராளமாக பார்க்கலாம்.


கட்டுரையாளர் -$பா.ஏகலைவன்.
பத்திரிகையாளர்- எழுத்தாளர்.

Source- 
பேராசிரியர், டாக்டர்.செல்லதுரை (அருட்தந்தை.சேசு சபை) எழுதிய 'தென்னக இசையியல்' நூல்.
கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர்/ பேரா. ஹேமநாதன்.
தேவாரம் ஆய்வாளர் முனைவர் சுரேஷ். (மதுரை)
மற்றும் சில இசையியல்-நாட்டியக்கலை பேராசிரியர்கள்.
*தொடக்கப்பள்ளிகளை மூடினால் போராட்டம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  




*🌟தொடக்கப்பள்ளிகளை மூடும் எண்ணத்தை அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் கூறியுள்ளார்.*


*🌟நெல்லையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் மணிமேகலை தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் சிறப்புரை ஆற்றினார், மாநில செயலாளர் தோழர் முருகேசன் மற்றும் நெல்லை மாவட்டச்செயலாளர் தோழர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.*


*பின்னர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.மயில் கூறியதாவது:*


*🌟பள்ளிக்கல்வித்துறை தினமும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது. தொடக்கப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை அருகில் உள்ள வேறு பள்ளிகளுடன் இணைக்கப் போவதாகவும், மூடப்படும் பள்ளிகளை நூலகமாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 3450 பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்விச் சூழல் பாதிக்கப்படும்.*


*🌟பள்ளிகளை தொடர்ந்து மூடினால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும். கேரளாவில் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற கொள்கையால் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் முடிவால் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் மட்டுமின்றி ஏழாயிரம் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர்.*


*🌟இதே போல் மேல்நிலை வகுப்புகளில், நகர்புறங்களில் 30 மாணவர்களுக்கு கீழும், கிராமப்புறங்களில் 15 மாணவர்களுக்கு கீழும் உள்ள பள்ளிகளை பிற பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.* 


*🌟அரசு இந்த திட்டங்களை உடனே கைவிட வேண்டும், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களை சந்தித்து பேச உள்ளோம்.அதன் பிறகும் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.*


*🌟மெட்ரிக், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தொடக்கநிலை மாணவர்களைச் சேர்ப்பதாலும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது. இதை கைவிட்டு தனியார் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை அரசு தொடக்கப்பள்ளிகளிலும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.*